தாயிஃப் நகரில்

தாயிஃப் நகரில்




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு....
அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்...
நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வெளியே இஸ்லாமிய அழைப்பு!

நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு நபி (ஸல்) மக்காவிலிருந்து 60 மைல் தொலைவிலுள்ள தாம்ஃபிற்குச் சென்றார்கள். (இது கி.பி. 619 மே மாதம் இறுதி அல்லது ஜுன் மாத ஆரம்பத்தில் ஆகும்). நபி (ஸல்) அவர்கள் தங்களது அடிமை ஜைது இப்னு ஹாஸாவுடன் கால்நடையாகச் சென்றார்கள். திரும்பும்போதும் கால்நடையாகவே திரும்பினார்கள். வழியிலிருந்த ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் இஸ்லாமிய அழைப்பு கொடுக்கப்பட்டும், அக்கூட்டத்தால் எவரும் இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.


நபி (ஸல்) அவர்கள் தாம்ஃபிற்குச் சென்றடைந்தபோது அங்கு வசித்து வந்த ஸகீஃப் கூட்டத்தாரின் தலைவர்களும் ‘அம்ர் இப்னு உமைர் அஸ்ஸகபி’ என்பவனின் பிள்ளைகளுமான 1) அப்து யாலில், 2) மஸ்ஊது, 3) ஹபீப் என்ற மூன்று சகோதரர்களிடம் சென்றார்கள். அவர்களிடம் இஸ்லாமைப் பரப்புவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரினார்கள். ஆனால், அவர்களில் ஒருவன் “உன்னை அல்லாஹ் தூதராக அனுப்பியது உண்மையென்றால் நான் கஅபாவின் திரைகளைக் கிழித்து விடுவேன்” என்று கூறினான். மற்றொருவன் “அல்லாஹ்வுக்கு உன்னைத் தவிர நபியாக அனுப்ப வேறொருவர் கிடைக்கவில்லையா?” என்று கேட்டான்.

மூன்றாமவன், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உன்னிடம் ஒருபோதும் பேச மாட்டேன். நீ உண்மையில் தூதராக இருந்தால் உனது பேச்சை மறுப்பது எனக்கு மிக ஆபத்தானதாகும். நீ அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவராக இருந்தால் உன்னிடம் பேசுவதே எனக்குத் தகுதியல்ல” என்று கூறினான். அப்போது நபி (ஸல்) “இதுதான் உங்கள் முடிவாக இருந்தால் நமது இந்த சந்திப்பை (மக்களுக்கு வெளிப்படுத்தாமல்) மறைத்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) தாம்ஃபில் பத்து நாட்கள் தங்கி அங்குள்ள மற்ற எல்லா தலைவர்கள், பிரமுகர்களைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். ஆனால், அவர்களில் எவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாததுடன் தங்களது ஊரைவிட்டு உடனடியாக வெளியேறும்படியும் கூறி, நபி (ஸல்) அவர்கள் மீது வம்பர்களை ஏவிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் ஊரைவிட்டு வெளியே செல்ல முயன்றபோது அங்குள்ள வம்பர்களும் அடிமைகளும் ஒன்றுகூடி அவர்களை ஏசிப்பேசினர்.

இறுதியில் மக்களின் கூட்டம் அதிகமாகி அவர்கள் அனைவரும் இரு அணிகளாக நின்று கொண்டு, நபி (ஸல்) அவர்களின் மீது கற்களை எறிந்தனர். அதிகமான கற்களை நபி (ஸல்) அவர்களின் குதிகால் நரம்பை நோக்கி எறியவே அவர்களது பாதணிகளும் இரத்தக் கறைகளாயின. நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களது அடிமை ஜைது இப்னு ஹாஸா நபியவர்களைக் காப்பதற்காக தங்களையே கேடயமாக்கிக் கொண்டார்கள். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தாம்ஃபிலிருந்து மூன்று மைல்கள் தொலைவிலுள்ள ரபிஆவுடைய மகன்களான உத்பா, ஷைபா என்ற இருவருக்குச் சொந்தமான தோட்டம் வரை நபி (ஸல்) அவர்களை அடித்துக் கொண்டே வந்தனர். நபி (ஸல்) அந்த தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள திராட்சை தோட்ட பந்தலின் நிழலில் அமர்ந்தார்கள். அப்போதுதான் மிகப் பிரபலமான அந்த பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். இதனால் நபி (ஸல்) அவர்களின் உள்ளம் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளினால் எவ்வளவு வேதனை அடைந்திருந்தது என்பதையும் தாயிஃப் மக்கள் இஸ்லாமை ஏற்காததினால் எவ்வளவு துக்கத்திற்கு ஆளானார்கள் என்பதையும் இந்த பிரார்த்தனையிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

இதோ நபி (ஸல்) கேட்ட பிரார்த்தனை:

“அல்லாஹ்வே! எனது ஆற்றல் குறைவையும் எனது திறமைக் குறைவையும் மனிதர்களிடம் நான் மதிப்பின்றி இருப்பதையும் உன்னிடமே முறையிடுகிறேன். கருணையாளர்களிலெல்லாம் மிகப்பெரியகருணையாளனே! நீதான் எளியோர்களைக் காப்பவன் நீதான் என்னைக் காப்பவன். நீ என்னை யாரிடம் ஒப்படைக்கிறாய்? என்னைக் கண்டு முகம் கடுகடுக்கும் அந்நியனிடமா? அல்லது என்னுடைய காயத்தை நீ உரிமையாக்கிக் கொடுத்திடும் பகைவனிடமா? உனக்கு என்மீது கோபம் இல்லையானால் (இந்த கஷ்டங்களையெல்லாம்) நான் பொருட்படுத்தவே மாட்டேன். எனினும், நீ வழங்கும் சுகத்தையே நான் எதிர்பார்க்கிறேன். அதுவே எனக்கு மிக விசாலமானது. உனது திருமுகத்தின் ஒளியினால் இருள்கள் அனைத்தும் பிரகாசம் அடைந்தன் இம்மை மறுமையின் காரியங்கள் சீர்பெற்றன. அத்தகைய உனது திருமுகத்தின் ஒளியின் பொருட்டால் உனது கோபம் என்மீது இறங்குவதிலிருந்தும் அல்லது உனது அதிருப்தி என்மீது இறங்குவதிலிருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன். அல்லாஹ்வே! நீயே பொருத்தத்திற்குரியவன். நீ பொருந்திக் கொள்ளும்வரை உன் கோபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ்வே! பாவத்திலிருந்து தப்பிப்பதும், நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும் உனது அருள் இல்லாமல் முடியாது.”

நபி (ஸல்) அவர்களை இந்த நிலைமையில் பார்த்ததும் ரபிஆவின் மகன்களுக்கு இரக்கம் வந்தது. தங்களது கிறிஸ்துவ அடிமை அத்தாஸை அழைத்துத் “திராட்சைக் குலையை அவருக்குச் சென்று கொடு” என்று கூறினர். திராட்சைக் குலைகளை அத்தாஸ் நபி (ஸல்) அவர்களுக்கு முன் வைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறி சாப்பிட்டார்கள்.

இதைக் கண்ட அத்தாஸ் “இந்தப் பேச்சு இவ்வூர் மக்கள் பேசும் பேச்சல்லNவ் உங்களுக்கு இது எப்படித் தெரியும்?” என்று கேட்டார். அதற்கு, “உனக்கு எந்த ஊர்? உனது மார்க்கம் என்ன?” என்று அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்க, அதற்கு அவர் “நீனவாவைச் சேர்ந்த கிறிஸ்துவன் நான்” என்றார். “நல்லவரான யூனுஸ் இப்னு மத்தாவின் ஊரைச் சேர்ந்தவர்தானே?” என்று நபி (ஸல்) அவரிடம் கேட்டதற்கு அவர் ஆச்சயத்துடன் “யூனுஸ் இப்னு மத்தாவைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்” என்றார். “அவர் எனது சகோதரர் அவரும் ஓர் இறைத்தூதராக இருந்தார் நானும் இறைத்தூதர் தான்” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறியவுடன், அத்தாஸ் நபி (ஸல்) அவர்களின் தலை, கை மற்றும் கால்களை முத்தமிட்டார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரபிஆவின் மகன்களில் ஒருவர் மற்றவரிடம் “இதோ உனது அடிமையை அவர் குழப்பிவிட்டார்” என்று கூறினான். அத்தாஸ் திரும்பி வந்தவுடன் “உனக்கு என்ன கேடு நேர்ந்தது?” என்று அவ்விருவரும் இடித்துரைத்தனர். அதற்கு அத்தாஸ், “எனது எஜமானர்களே! இவரை விடச் சிறந்த எவரும் இப்பூமியில் இல்லை. இவர் எனக்கு ஒரு விஷயத்தை மிக உறுதியாகக் கூறினார். அதனை இறைத்தூதரைத் தவிர வேறெவரும் அறிந்திருக்க முடியாது” என்றார். அதற்கு அவ்விருவரும் “அத்தாஸே! உனக்கென்ன கேடு. இவர் உம்மை உமது மார்க்கத்திலிருந்து திருப்பிவிடாமல் இருக்கட்டும். உமது மார்க்கம்தான் இவன் மார்க்கத்தைவிட சிறந்தது” என்று கூறினர். (இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) அவர்கள் அந்தத் தோட்டத்திலிருந்து வெளியேறி மிகவும் கவலையுடன் உள்ளம் உடைந்தவர்களாக மக்கா நோக்கி திரும்பும் வழியில் ‘கர்னுல் மனாஜில்’ என்ற இடத்தை அடைந்த போது அல்லாஹ் அவர்களிடம் ஜிப்ரீலையும், (மலைகளின் வானவர்) மலக்குல் ஜிபாலையும் அனுப்பினான். மலக்குல் ஜிபால் தாயிஃப்வாசிகளாகிய இம்மக்களை இரு மலைகளையும் ஒன்று சேர்த்து நசுக்கி அழித்துவிடவா”? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.

ஆயிஷா (ரழி) இச்சம்பவத்தின் விவரத்தைக் கூறுகின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் “உஹுத் போரைவிடக் கடுமையான நாள் எதுவும் உங்களது வாழ்க்கையில் வந்துள்ளதா?” என்று கேட்டேன். அதற்கு “உனது கூட்டத்தாரின் மூலம் நான் பல துன்பங்களைச் சந்தித்துள்ளேன். அவற்றில் நான் சந்தித்த துன்பங்களில் மிகக் கடுமையானது ‘யவ்முல் அகபா’ என்ற தினத்தில் எனக்கு ஏற்பட்ட வேதனையே ஆகும். நான் அப்து யாலிலின் மகனிடம் என்னை அறிமுகப்படுத்தினேன். ஆனால், அவன் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் கவலையுடன் திரும்ப மக்காவை நோக்கி பயணமாகி ‘கர்னுல் மனாஜில்’ என்ற பெயருள்ள ‘கர்னு ஸஆலிப்’ என்ற இடத்தில் வந்து தங்கிய போதுதான் எனக்கு முழுமையான நினைவே திரும்பியது. நான் தலையைத் தூக்கிப் பார்த்தபோது என் தலைக்கு மேல் ஒரு மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது. அந்த மேகத்தில் ஜிப்ரீல் இருந்தார். அவர் என்னை அழைத்து ‘நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் உங்களது கூட்டத்தாரிடம் பேசியதையும் அவர்கள் உங்களுக்குக் கூறிய பதிலையும் கேட்டுக் கொண்டான். இம்மக்கள் விஷயத்தில் நீங்கள் விரும்பியதை மலக்குல் ஜிபாலுக்கு ஏவ வேண்டும் என்பதற்காக அவரை உங்களிடம் அனுப்பி இருக்கின்றான்’ என்று கூறினார். மலக்குல் ஜிபால் என்னை அழைத்து எனக்கு ஸலாம் கூறி “முஹம்மதே! ஜிப்ரீல் கூறியவாறே அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளான். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? நீங்கள் விரும்பினால் இவர்களை இரண்டு மலைகளையும் கொண்டு நசுக்கி விடுகிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) “அதை ஒருக்காலும் நான் விரும்ப மாட்டேன். மாறாக, அவர்களிலிருந்து அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு இணை வைக்காதவர்களை அவன் உருவாக்குவான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த பதிலின் மூலம் நபி (ஸல்) அவர்களின் தனித்தன்மை தெரியவருவதுடன், அவர்கள் எத்தகைய மகத்தான பண்புள்ளவர்கள் என்பதையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஏழு வானங்களுக்கு மேலிருந்து அல்லாஹ் அருளிய இம்மறைவான உதவியைப் பார்த்து நபி (ஸல்) அவர்களின் மனம் மிகவும் நிம்மதியடைந்தது. தொடர்ந்து மக்காவை நோக்கி பயணமாகும்போது ‘நக்லா’ என்ற பள்ளத்தாக்கில் சில நாட்கள் தங்கினார்கள். வாதி நக்லாவில் தங்குவதற்கு வசதியான தண்ணீரும் செழிப்புமுள்ள அஸ்ஸய்லுல் கபீர், ஜைமா என்ற இரு இடங்கள் இருந்தன. இவ்விரு இடங்களில் குறிப்பாக எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கினார்கள் என்பதற்கு சரியான ஆதாரம் நமக்குக் கிடைக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் இவ்விடத்தில் தங்கியிருக்கும்போது சில ஜின்களை அல்லாஹ் நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தான். (ஸஹீஹுல் புகாரி)

இந்த ஜின்களைப் பற்றி குர்ஆனில் இரண்டு இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஒன்று ‘அஹ்காஃப்’ எனும் அத்தியாயத்தில்:

“(நபியே!) இந்தக் குர்ஆனைக் கேட்கும் பொருட்டு, ஜின்களில் சிலரை நாம் உங்களிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில் (அவர்கள் தங்கள் மக்களை நோக்கி) “நீங்கள் வாய்பொத்தி (இதனைக் கேட்டுக்கொண்டு) இருங்கள்” என்று கூறினார்கள். (இது) ஓதி முடிவு பெறவே, தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.

(அவர்களை நோக்கி) “எங்களுடைய இனத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பட்டிருக்கின்றது. அது, தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகின்றது. அது சத்தியத்திலும், நேரான வழியிலும் செலுத்துகின்றது. எங்களுடைய இனத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறி, அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுடைய பாவங்களை (அல்லாஹ்) மன்னித்தும் விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுவான்.” (அல்குர்ஆன் 46:29, 30, 31)

மற்றொன்று ‘ஜின்’ எனும் அத்தியாயத்தில்:

“(நபியே!) நீங்கள் கூறுங்கள்: “வஹி மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியுற்று(த் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி) “நிச்சயமாக, நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம் அது நேரான வழியை அறிவிக்கின்றது. ஆகவே, அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இனி) நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் இணையாக்க மாட்டோம்...” (அல்குர்ஆன் 72:1-15)

ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து குர்ஆனை கேட்டுச் சென்றன. இதனை இந்த வசனங்கள் மூலம் அல்லாஹ் அறிவித்தப் பிறகு தான் நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள். அதற்கு முன்பு இது அவர்களுக்குத் தெரியாது. இதுதான் ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்த முதல் முறையாகும் என்பது நமக்குத் தெரியவருகிறது. மேலும், இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் பலமுறை வந்திருக்கிறார்கள் என்பதும் வேறு சில அறிவிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.

இது உண்மையில் அல்லாஹ்வின் மறைவான பொக்கிஷத்திலிருந்து அருளப்பட்ட மகத்தான உதவியாகும். தன்னைத் தவிர வேறு எவரும் அறிந்துகொள்ள முடியாத அவனுடைய படையைக் கொண்டு, அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு உதவி செய்தான். மேலும், இது தொடர்பாக இறங்கிய வசனங்களில் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி வெற்றியடையும் என்ற நற்செய்திகளும் இருந்தன. இப்பிரபஞ்சத்தின் எந்தவொரு சக்தியும் அவர்களின் அழைப்புப் பணி வெற்றியடைவதை தடுத்திட முடியாது என்று அவ்வசனங்கள் மிக உறுதியாக அறிவித்தன.

“எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ (அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். தண்டனையில் இருந்து தப்ப) அவன் பூமியில் எங்கு ஓடியபோதிலும் அல்லாஹ்வை தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வை அன்றி, பாதுகாப்பவர் அவனுக்கு ஒருவருமில்லை. (அவனைப் புறக்கணிக்கும்) இத்தகையவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருப்பர்”

“நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், (பூமியிலிருந்து) ஓடி அவனை விட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் உறுதியாக அறிந்துகொண்டோம்.” (அல்குர்ஆன் 72:12)

அல்லாஹ்வின் இந்த மாபெரும் உதவியாலும் மகத்தான நற்செய்திகளாலும் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்திலிருந்து கவலை நீங்கியது துக்கம் அகன்றது மக்காவிற்கு திரும்பச் சென்று இஸ்லாமைப் பரப்புவதிலும் நிரந்தரமான அல்லாஹ்வின் தூதுத்துவத்தை எடுத்துரைப்பதிலும் தனது முந்திய திட்டத்தையே புதிய உற்சாகத்துடனும், துணிவுடனும், வீரத்துடனும் செய்ய வேண்டும் என்று உறுதிகொண்டார்கள்.

அப்பொழுது ஜைது இப்னு ஹாஸா “நபியே! குறைஷிகள் உங்களை மக்காவிலிருந்து வெளியேற்றி இருக்க, நீங்கள் இப்பொழுது எப்படி அங்கு செல்ல முடியும்?” என்றார். அதற்கு “ஜைதே! நீங்கள் பார்க்கும் இந்த துன்பங்களுக்கு ஒரு முடிவையும் நல்ல மகிழ்ச்சி தரும் மாற்றத்தையும் நிச்சயம் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான். நிச்சயமாக, அல்லாஹ் அவனது மார்க்கத்திற்கு உதவி செய்வான் அவனது நபிக்கு வெற்றியைத் தருவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பிறகு தனது பயணத்தைத் தொடர்ந்து மக்கா அருகே வந்தவுடன் “ரா குகையில் தங்கிக் கொண்டு குஜாஆ கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அக்னஸ் இப்னு ஷுரைக்கிடம் அவர் தனக்கு அடைக்கலம் தர வேண்டும்” எனக் கூறி தூது அனுப்பினார்கள். ஆனால், “தான் மக்காவாசிகளுடன் நட்பு கொண்டவராக இருப்பதால், அவர்கள் விரும்பாதவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது” என்று அக்னஸ் கூறிவிட்டார். பிறகு சுஹைல் இப்னு அயிடம் நபி (ஸல்) அவர்கள் தூதனுப்பினார்கள். அதற்கு “தான், ஆமிர் கிளையைச் சேர்ந்தவன். எனவே, கஅப் கிளையாருக்கு எதிராக என்னால் அடைக்கலம் கொடுக்க முடியாது” என்று அவர் மறுத்துவிட்டார்

அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் முத்இமிடம் தூது அனுப்பினார்கள். முத்இம் “ஆம்! நான் அடைக்கலம் தருவேன்” என்று கூறி, தானும் ஆயுதங்களை அணிந்துகொண்டு தனது ஆண் பிள்ளைகள் மற்றும் கூட்டத்தாரையும் ஆயுதம் அணியச் செய்து, கஅபாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நான்கு மூலைகளிலும் அவர்களை நிற்கவைத்து, “நான் முஹம்மதிற்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன். அதனால்தான் உங்களை இங்கு அழைத்து வந்தேன்” என்று அவர்களுக்கு அறிவித்தார்.

பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துவர ஒருவரை அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் ஜைது இப்னு ஹாஸாவுடன் மஸ்ஜிதுல் ஹராமிற்கு வந்தார்கள். முத்இம் தனது ஒட்டகத்தின் மீதேறி அமர்ந்துகொண்டு “குறைஷிகளே! நான் முஹம்மதிற்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன். உங்களில் எவரும் முஹம்மதை பழிக்கக் கூடாது” என்று அறிவிப்புச் செய்தார். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட்டு, கஅபாவை வலம் வந்து, இரண்டு ரகஅத்துகள் தொழுதுவிட்டு தனது வீட்டிற்குச் சென்றார்கள். அது வரையிலும் முத்இமும் அவரது மக்களும் ஆயுதமேந்தி பாதுகாப்பிற்காக நபி (ஸல்) அவர்களைச் சுற்றி நின்று இருந்தனர்.

அபூஜஹ்ல் “நீ அடைக்கலம் (மட்டும்) அளித்துள்ளாயா? அல்லது முஸ்லிமாகி விட்டாயா?” என்று முத்இமிடம் கேட்டான். அதற்கு “இல்லை. நான் அடைக்கலம்தான் அளித்துள்ளேன்” என்று முத்இம் கூறவே, “சரி! நீ அடைக்கலம் கொடுத்தவருக்கு நாங்களும் அடைக்கலம் கொடுக்கிறோம்” என்று கூறினான். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

முத்இமின் இந்த செயலை நபி (ஸல்) நினைவு வைத்திருந்தார்கள். “பத்ர் போரில் எதிரிகள் பலர் கைதிகளாக்கப்பட்டபோது, முத்இம் உயிருடன் இருந்து, இந்த துர்நாற்றம் பிடித்தவர்களின் உரிமைக்காக என்னிடம் பேசியிருந்தால் அவருக்காக இவர்கள் அனைவரையுமே நான் விடுதலை செய்திருப்பேன்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
Share this product :

கருத்துரையிடுக

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. எம்.ஜே.எம். றிம்சி - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger